வரதட்சணை கொடுமை: இளம்பெண் எரித்துக் கொலை, 8 மாத குழந்தையும் கருகியது
பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் வரதட்சணை விவகாரம் தொடர்பாக 22 வயது பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கனன்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்த் பாபு. அவருக்கும் ஷன்னோ(22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணமானது. அவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்த் பாபு தனது மனைவியிடம் அவரது பெற்றோரிடம் கேட்டு ரூ. 2 லட்சம் பணமும், பைக்கும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாபு தனது தந்தை அதான் ஷா, தாய் சன்னி மற்றும் சகோதரர் அஹ்சான் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். அந்த பெண் எரிந்தபோது அவரது அருகில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையும் உடல் கருகி பலியானது.
இது குறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாபு, அவரது பெற்றோர் மற்றும் சகோதரரை புதன்கிழமை காலை கைது செய்தனர். விசாரணையில் நான்கு பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.