பெண்ணை நிர்வாணமாக்கி முகத்தில் கரியைப் பூசி கழுதை மேல் ஏற்றி ஊர்வலம்: 30 பேர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் 45 வயதுப் பெண்ணை, முகத்தில் கரியைப் பூசி நிர்வாணமாக்கி கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்ற அக்கிரமம் நடந்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற அநாகரீக செயல் தொடர்பாக 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் துர்வல் என்ற பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் நடந்துள்ளது. இந்தப் பெண் தனது உறவினரை கொன்று விட்டதாக குற்றம் சாட்டிய கிராம பஞ்சாயத்துக் கமிட்டியினர் கூடி இந்த கொடும் தண்டனையை அப்பெண்ணுக்கு விதித்தனர். பின்னர் தண்டனையை நிறைவேற்ற கழுதை மேல் நிர்வாணமாக உட்கார வைத்து அழைத்துச் சென்று அப்பெண்ணை அவமதித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை இந்த அநாகரீக செயலை அந்தக் கிராமமே கூடி அரங்கேற்றியுள்ளது. போலீஸாருக்கு இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து 30 பேரைக் கைது செய்தனர். இதில் 9 பேர் அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆவர்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு காப்பகத்தில் போலீஸார் சேர்த்துள்ளனர். அவருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.
துர்வல் கிராமத்தில், நவம்பர் 2ம் தேதி வர்தி சிங் என்பவர் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. மேலும் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவரது உடலையும் எரித்து விட்டனர்.
இந்த நிலையில் வர்தி சிங்கின் மனைவி, நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணின் மீது சந்தேகமடைந்தார். அவர்தான் தனது கணவரைக் கொன்றிருக்க வேண்டும் என்பது அவரது சந்தேகம்.
இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்துக் கமிட்டியிடம் போய் அவர் முறையிட்டார். அந்த,க் கட்டப் பஞ்சாயத்துக் கோஷ்டியினர் பஞ்சாயத்தைக் கூட்டி விசாரித்தனர். அப்போது அந்தப் பெண்தான் கொலையாளி என்று இவர்களாகவே தீர்ப்பு கூறி தண்டனையையும் அறிவித்து நிறைவேற்றியுள்ளனர்.
கிராமத்தின் நடுவில் வைத்து அத்தனை பேர் பார்க்க அப்பெண்ணை நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் அவரது முகத்தில் கரியைப் பூசி கழுதை மீது ஏற்றியுள்ளனர். பின்னர் கிராமம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் இன்னும் அதிர்ச்சி குறையாமல் உள்ளார். அவருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.