ஹரியானாவில் வங்கிக்கு பணம் எடுக்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி
ஹரியானா மாநிலத்தில் வங்கிக்கு பணம் மாற்ற வந்த பெண் உயிரிழந்தார்.
கர்னல்: ஹரியானா மாநிலத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியானது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். இதனிடையே பணமாற்றம், ஏடிஎம் கியூ உள்ளிட்ட காரணங்கள் நாடுமுழுவதும் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் வழக்கம்போல் எந்த வங்கி கிளைக்கும் சென்று ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்து இருந்தது.
இதனிடையே ஹரியானா மாநிலம் கர்னல் நகரில் வங்கிக்கு பணம் மாற்ற வந்த பெண் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம் எடுக்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கர்னல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணமாற்றத்தின் போது தொடரும் உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது