விரைவு தபால் மூலம் "முத்தலாக்" பிரதமர் மோடியிடம் டிவிட்டரில் பெண் புகார்
தனது கணவர் விரைவு தபால் மூலம் முத்தலாக் அனுப்பியுள்ளதாக பிரதமர் மோடியிடம் டிவிட்டரில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர் தனது கணவர் விரைவு தபால் மூலம் முத்தலாக் அனுப்பியுள்ளதாக பிரதமர் மோடியிடம் டிவிட்டரில் புகார் அளித்துள்ளார்.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாம் தனி நபர் சட்ட வாரியம் ஏற்கிறது. ஆனால் இதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் சிலரும், தன்னார்வ அமைப்புகளும் அணி சேர்ந்துள்ளன.
நடைமுறையில் உள்ள 'முத்தலாக்' முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பலர் வழக்கு தொடுத்துள்ளனர். மத்திய அரசும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இதுதொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் அவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்குமாறும், தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.