2வதும் பெண் குழந்தை... தாய்க்கு மொட்டையடித்து சித்ரவதைப் படுத்திய கணவர் வீட்டார்!
உத்திரப்பிரதேசத்தில் இரண்டாவது பெண் குழந்தை பெற்ற பெண்ணை, கணவர் வீட்டார் மொட்டையடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
ஆக்ரா: உத்திரப்பிரதேசத்தில் இரண்டாவது பெண் குழந்தை பெற்றதற்காக பெண் ஒருவரின் தலையை அவரது கணவர் வீட்டார் மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது மால்புரா கிராமம். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் நானு என்ற பெண்ணிற்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே நான்கு வயது பெண் குழந்தைக்கு தாயான நானு, சமீபத்தில் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், நானு மீது கணவர் வீட்டார் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாமனார், மாமியார் சேர்ந்து நானுவிற்கு மொட்டையடித்துள்ளனர். இதற்கு நானுவின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
அதோடு, புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கவும் நானுவிற்கு அவர்கள் அனுமதி தரவில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு கொடுமைகளை நானு அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை பால் இல்லாமல் தவிப்பதைத் தாங்க முடியாத நானு, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நானுவின் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், மகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை நானுவின் பெற்றோர் வாபஸ் பெற்று விட்டனர். இதனையடுத்து நானுவின் கணவர் வீட்டாரை அழைத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி விட்டனர்.
மேலும், ரத்தசோகை நோயினால் உடல் ஆரோக்கியம் குன்றிய நானுவுக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படியும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.