குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்!
மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டில் ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன.
அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள் வெளியே வந்தன. இதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பார்த்துவிட்டு தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
உடல் உறுப்புகள்
இதையடுத்து அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடினர். அப்போது அந்த சாக்குப் பை அருகே சென்ற போது அழுகிய நாற்றம் வீசியது. அப்போது மனித உடலின் உறுப்புகள் இருந்ததை கண்டறிந்தனர். உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தலையில்லாத பெண் உடல்
போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து அந்த சாக்குப்பையை பார்த்தனர். அதில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் இருந்தது. அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அந்த பெண்ணின் உடல் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் மயானம் பகுதிக்கு பின்புறத்தில் உள்ள குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்டது.
அடையாளம்
அந்த பெண் கொலை செய்யப்பட்டு, அவரது அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலை துண்டிக்கப்பட்டிருக்கலாம். இதையடுத்து அவரது உடல் சாக்குப்பையில் சுற்றப்பட்டு குப்பை கிடங்கில் வீசப்பட்டுள்ளது. அதை விலங்குகள் இழுத்து வந்து கிளறின.
சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சட்டரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என போலீஸார் தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருவது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.