நேர்த்திக் கடன்... சிவனுக்கு ‘நாக்கை’ வெட்டி காணிக்கையாக கொடுத்த இளம்பெண்!
ரெய்ப்பூர்: நேர்த்திக் கடன் காரணமாக சத்தீஸ்கர் சிவன் கோவிலில் இளம்பெண் ஒருவர் தனது நாக்கை வெட்டி சிவனுக்கு காணிக்கையாக அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ளது நுனேரா கிராமம். இங்குள்ள சிவன் கோவில் ஒன்றில் நேற்று காலை 28 வயதுள்ள சீமா பாய் எனும் இளம்பெண் ஒருவர், தனது கணவர் ராம் கோண்ட் உடன் சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார்.
சிவலிங்கத்தின் முன் நின்று தனது பிரார்த்தனையை முடித்த அவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது நாக்கை அறுத்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மனைவியின் செயலால் பதறிப் போன கோண்ட் உடனடியாக தனது மனைவியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேண்டுதல் காரணமாக சீமா இத்தகைய விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோர்பா மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.