சுவாதி கொலையை போல் டெல்லி அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் குத்திக்கொலை !
டெல்லி: டெல்லி அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை பிங்கி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை பிங்கி (22) என்ற இளம்பெண் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜிஜேந்திரா (25) என்ற இளைஞர் பிங்கியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதனை, சிசிடிவி கேமிரா காட்சிகளில் பார்த்த ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும், மெட்ரோ நிலைய பணியாளர்களும் அந்த இடத்துக்கு விரைந்து வந்து, இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் உயிரிழந்தார்.
இதனிடையே , கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து, அடித்து உதைத்தனர். படுகாயம் அடைந்த அவரையும் போலீசார் மருத்துவமனை கொண்டுசென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குர்கான் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் குர்கானில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.