ஷாக்.. நில ஆவண குளறுபடி.. ஆத்திரமடைந்த விவசாயி.. பெண் தாசில்தார் உயிருடன் தீ வைத்து எரிப்பு
Recommended Video
தெலுங்கானா: பெண் வட்டாட்சியர் விஜயா மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் கொளுத்தி எரித்து உள்ளார் மர்ம நபர்.. பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உண்டு பண்ணி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அப்துல்லாப்பூர் மெட் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நிலம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ஒருவர் தாசில்தார் ஆபீசுக்கு வந்து கொண்டே இருந்தார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் பணிகள் அலுவலகத்தில் விறுவிறுப்பான நடந்து கொண்டிருந்தன. அப்போது சம்பந்தப்பட்ட அந்த நபர் இன்றும் வந்திருந்தார்.
விஜயா ரெட்டி
தாசில்தார் விஜயாவின் ரூமுக்குள் சென்றார் அவர்... 2 பேருக்கும் இடையே என்ன நடந்தது, என்ன பேசினார்கள் என்றே தெரியாத நிலையில் திடீரென தாசில்தார் ரூமில் இருந்து "ஐயோ.. அம்மா..காப்பாத்துங்க..." என்ற அலறல் சத்தம் கேட்டது. அப்போதுதான் அங்கிருந்த ஊழியர்கள் விஜயா ரெட்டி ரூமுக்குள் நுழைந்தனர்.
பெட்ரோல்
அப்போது விஜயா உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அங்கு வந்திருந்த நபர், கையில் வைத்திருந்த பெட்ரோலை விஜயா மீது ஊற்றி தீ வைத்து பற்ற வைத்து விட, இதில், தீ உடம்பெல்லாம் பக்கென்று பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது.
தீக்காயம்
இதைக் கண்டு ஊழியர்கள் அலறி துடித்தனர். உடனே, அங்கிருந்த அட்டென்டர், டிரைவர் ஆகியோர் விஜயாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை.. தப்பி ஓட முயன்ற விஜயா வரண்டாவிலேயே தீயில் உடல் கருகி அங்கேயே இறந்துவிட்டார் விஜயா.. காப்பாற்ற போன 2 பேருக்குமே கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
லஞ்சம்
விஜயா மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நபர் பின்னர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெயர் சுரேஷ் என்பதும், விவசாயியான தன்னிடம் நில விவகாரத்தில் விஜயா லஞ்சம் கேட்டதாகவும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாலேயே இவ்வாறு செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தாசில்தாரை மிகக் கொடூரமாக உயிருடன் எரித்து கொன்ற விவகாரம் தெலுங்கானாவில் பற்றி கொண்டு எரிகிறது!
நில விவகாரங்களில் குழப்பம்
தெலங்கானாவில் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் பல குளறுபடிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெரும் புகார்களும் எழுந்தன. இந்த குளறுபடியால் சுரேஷும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை சரி செய்ய அவர் பலமுறை தாலுகா அலுவலகம் வந்துள்ளார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த கோபத்தில்தான் அவர் இந்த பயங்கர செயலில் இறங்கி விட்டதாக சொல்கிறார்கள்.
அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி
இந்த கொடூர சம்பவம் குறித்து தெலங்கானா அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு அலுவலர்கள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். சிறப்பான சேவை செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். அதில் குறைபாடு இருந்தால் உரிய முறையில் புகார் அளித்து நிவர்த்தி செய்யலாம். அதை விட்டு விட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்குவது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது கிட்டத்தட்ட 60 சதவீத காயங்களுடன் சுரேஷம் உயிருக்குப் போராடி வருவதாக கூறப்படுகிறது.