ஹைதராபாத்தில் மாயமான டிசிஎஸ் பெண் என்ஜினியர் கண்டுபிடிப்பு: ஆனால்...
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மாயமான டிசிஎஸ் நிறுவன என்ஜினியர் அனுஸ்ரீ கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த பிரபாகரின் மகள் அனுஸ்ரீ(22). அவர் தெலுங்கானா மாநிலம் கச்சிபவுலியில் இருக்கும் பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி ஹைதராபாத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை தனது தந்தைக்கு போன் செய்து தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. உடனே பிரபாகர் பெங்களூரில் இருந்து கிளம்பி ஹைதராபாத் சென்றார்.
விடுதிக்கு சென்றபோது அனு அலுவலகத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். அலுவலகத்திற்கு சென்றபோது அங்கும் அனு இல்லை. இதையடுத்து அவர் தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் அனுவை தேடி வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள மேதக் மாவட்டத்தில் இருக்கும் பதன்செருவில் அனு உடல்நலம் சரியில்லாமல் மிகவும் சோர்வடைந்த நிலையில், அரை மயக்கத்தில் நடந்து சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திங்கட்கிழமை அனு அலுவலகத்திற்கு சென்றுவிட்டதாக விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் திங்கட்கிழமை அனு அலுவலகத்திற்கு வரவில்லை என்று அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அனு எப்படி பதன்செருவுக்கு சென்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.