அய்யய்யோ அது வடை இல்லையா.. 12 பவுன் தங்கம் போச்சே.. ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன்!
வடை என நினைத்து 12 சவரன் நகையை பெண் ஒருவர் வீசியுள்ளார்
கோழிக்கோடு: வடையை சாப்பிட்டோமா, வாயைத் துடைச்சோமா, வாங்கிய பேப்பரை மறக்காமல் கீழே போட்டோமான்னு இருந்தால் ரொம்ப நல்லது.. இல்லாவிட்டால் இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதிதான் நடக்கும்.
உண்மையிலேயே இந்தப் பெண்ணைப் பார்த்து அழுவதா, சிரிப்பதான்னே தெரியலை. இவரது பெயர் கெளலத். கேரளாவைச் சேர்ந்தவர். சொந்த ஊர் கோழிக்கோடு போல.
வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது வீடு சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ளதாம். அன்று ஏதோ வேலையாக வெளியில் போயுள்ளார். கையோடு தனது 12 பவுன் நகையையும் எடுத்து வந்துள்ளார். அதை ஒரு பேப்பரில் கட்டி தான் வைத்திருந்த பையில் போட்டு பத்திரமாக எடுத்துக் கொண்டார்.
பஸ் ஏறுவதற்கு முன்பு பசித்திருக்கும் போல. கடையில் வடை வாங்கியுள்ளார். மெல்லமாக கடித்துத் தின்றபடி பஸ்ஸுக்காக காத்திருந்து பஸ்சிலும் ஏறினார். பஸ்சில் அமர்ந்தபடி வடையை ருசித்து சுவைத்து சாப்பிட்டபடி பயணித்துள்ளார். பிறகு பாதி வடையை பைக்குள்ளேயே வைத்தார்.
சிறிது நேரம் கழித்து வடை போதும் என்று நினைத்தாரோ என்னவோ அந்த வடையை எடுத்து காகிதத்தோடு சேர்த்து வெளியில் வீசினார். வீசிய அடுத்த விநாடியே அய்யய்யோ பஸ்ஸை நிறுத்துங்க என்று அலறினார். என்ன ஏது என்று அக்கம் பக்கத்தினர் கேட்டபோது வடைக்குப் பதில் நகை மடித்து வைத்திருந்த பொட்டலத்தை வீசி விட்டதாக கதறினார்.
''அண்ணே எங்க வீட்டுல தண்ணியாவது குடிங்க''.. திக்குமுக்காடிய தினகரன்..!
உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அத்தனை பேரும் கீழே இறங்கினார்கள். எல்லோரும் வீசப்பட்ட நகைப் பொட்டலத்தை வலை வீசி தேடினார்கள். அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் சிலரும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட முக்கால் மணி நேர தேடுதலுக்குப் பின் "சக்ஸஸ்" என்று குரல் கொடுத்தார் ஒரு ஆட்டோ டிரைவர். ஆமாங்க, நகை கிடைத்து விட்டது.
பிறகென்ன சந்தோஷமாக நகையை வாங்கி பத்திரமாக பையில் வைத்துக் கொண்டு தேடிக் கொடுத்த "சேட்டனுக்கும்" நன்றி கூறியபடி அந்தப் பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். பஸ் புறப்பட்டது.. புத்தம் புதுக் காற்றை அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்தபடி! இனிமே வடையைச் சாப்பிட்டிருங்க.. இல்லாட்டி இப்படித்தான்!!