என் மகளின் தற்கொலைக்கு அவளது காதலனே காரணம்: பிரதியுஷா தாய் குற்றச்சாட்டு
மும்பை: என் மகளின் மரணத்துக்கு அவளது காதலர் ராகுல்தான் காரணம் என்று பிரதியுஷாவின் தாயார் சோமா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பிரதியுஷாவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என்று பெண் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மும்பையில் அடுக்குமாடி குடியிப்பு ஒன்றில் வசித்து வந்தவர் டிவி சீரியல் நடிகை பிரதியுஷா பானர்ஜி. 24 வயதான இவர் ‘பாலிகா வாது', ‘ஹம் ஹெய்னா' ‘ஆகட்' உள்ளிட்ட இந்தி டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரதியுஷா நேற்று மாலை அவருடைய இல்லத்தில் உள்ள அறையில் மின்விசிறி கம்பியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து மும்பை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரதியுஷாவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து பிரதியுஷா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரதியுஷாவின் தற்கொலை டிவி நடிகர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதியுஷா கோழை அல்ல, இது திட்டமிட்ட கொலை என்று பிரதியுஷாவின் உறவினர்களும், நண்பர்களும் கூறி வருகின்றனர்.
பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசும் போது, பிரதியுஷாவும் நானும் ஒன்றாக வாழ்ந்துவந்தோம். ஆனால் கடந்த ஜனவரி 12 அன்று அவளுடைய காதலர் ராகுல் என்னிடம் வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும் இருவரும் மாலட் பகுதியில் வசிக்கப் போவதாகவும் கூறினார். மகளும் என்னை ஜம்ஷெட்பூருக்குப் போகச் சொன்னார். அங்குதான் எங்கள் வீடு உள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு அவள், தன் தந்தையிடம் பேசியுள்ளார். அப்போது தன் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறியுள்ளார். வியாழன் அன்று என்னிடம் பேசியபோது, சோகமாகப் பேசினாள். என் மகளின் மரணத்துக்கு ராகுலே காரணம். ஏனெனில் என் மகள் ராகுலுடனான உறவில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தாள் என்றார்.
இதனிடையே பிரதியுஷா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பெண் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீனா சபீக் என்ற பெண் சமூக ஆர்வலர், இது மிகவும் சோகமாக சம்பவம், பிரதியுஷாவின் மரணத்தை மேலோட்டமாக விசாரிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
பிரதியுஷா தற்கொலை தொடர்பாக அவரது காதலன் ராகுல் ராஜ் சிங்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதியுஷா ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.