பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்
அமராவதி: பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு தண்டனை(மரண தண்டனை) அளிக்கும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீசார் எண்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும்என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஜெகன் அறிவிப்பு
இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பெணகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என ஆந்திர மாநில சட்டசபையிலேயே அறிவித்தார்.
புதிய சட்டம்
அதன்படி குண்டூர் மாவட்டம் வெலம்புடியில் உள்ள தற்காலிக தலைமைச் செயலகத்தில் (ஜெகனின் இல்லம் அருகே) நேற்று அமைச்சரவை கூட்டத்தை ஜெகன் நடத்தினார். அந்த கூட்டத்தில் 'ஆந்திர மாநில குற்றவியல் சட்டம் 2019' கொண்டுவருவது என முடிவு செய்யப்பட்டது.
14 நாளில் விசாரணை
அந்த சட்டத்தின்படி, பெண்கள், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் 14 நாளில் விசாரணை நடத்தி தூக்கு துண்டனை விதிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கு பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல்கள், ஆசிட் தாக்குதல்கள், பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இழிவாக எழுதுதல் உள்ளிட்ட குற்றங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட உள்ளது.
பெண்கள் மீது அவதூறு
பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இழிவாக எழுதுவோருக்கு முதல்முறை தவறு செய்தால் 2 வருடம் தண்டனையும், இரண்டாவது முறை செய்தால் 4 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
14 வருடம் சிறை தண்டனை
குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 354 எப் என்ற தனிப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி குழந்தைகள் மீது வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். முன்னதாக 10 ஆண்டுகளாக இது இருந்தது.
போக்சோவில் திருத்தம்
போக்சோ சட்டத்தில் மூன்று ஆண்டுகள் என்று இருப்பதை 5ஆண்டுகளாகவும் உயர்த்த ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கண்ட் சட்ட திருத்தங்கள் அடங்கி ஆந்திர மாநில குற்றவியல் சட்டம் 2019ஐ தற்போது ஆந்திராவில் நடந்து வரும் நடப்பு சட்டபை கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து சட்டமாக்கவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.