3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை கோரும் பெண்கள் கமிட்டி
டெல்லி: முஸ்லீம் ஆண்கள் மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் கூறும் விதிமுறைக்கு தடை விதிக்குமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் அமைக்கப்பட்ட பெண்கள் கமிட்டி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 14 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை காங்கிரஸ் அரசு அமைத்து பெண்களின் நிலையை ஆய்வு செய்யுமாறு கூறியது. அந்த கமிட்டி தனது ஆய்வை முடித்து அறிக்கையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்திடம் இந்த வாரம் சமர்பித்துள்ளது.
அந்த கமிட்டி தனது பரிந்துரையில் முஸ்லீம் பெண்களின் முக்கிய பிரச்சனை பற்றி தெரிவித்துள்ளது.
தலாக்
முஸ்லீம் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் என்று கூறினால் போதும். அந்த முறைக்கு தடை விதிக்க கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
பெண்கள்
மூன்று முறை நேரிலோ, சமூக வலைதளம் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தலாக் கூறினால் விவாகரத்தாகிவிட்டது என்னும் முறையால் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என கமிட்டி தெரிவித்துள்ளது.
முஸ்லீம் சமூகம்
மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு தடை விதிக்க மத்திய அரசு நினைத்தாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு முஸ்லீம் சமூகத்திடம் அது கலந்தாலோசிக்க வேண்டும்.
தடை
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, துனிசியா, அல்ஜீரியா, ஈராக், ஈரான், இந்தோனேசியா மற்றும் வங்க தேசத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் அம்முறையை இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது.
பெண்கள் அமைப்பு
இஸ்லாமிய சட்டத்தில் சீர்திருத்தம் செய்யக் கோரி முஸ்லீம் பெண்கள் அமைப்புகள் பல காலமாக கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் உள்ளது.
ஃபேஸ்புக்
ஸ்கைப், ஃபேஸ்புக், ஏன் எஸ்.எம்.எஸ். மூலம் கூட மூன்று முறை தலாக் கூறி பெண்களை முஸ்லீம் ஆண்கள் விவாகரத்து செய்த சம்பவங்களை பார்த்துள்ளோம். தற்போது 14 பேர் கொண்ட கமிட்டி அளித்துள்ள பரிந்துரை கிடப்பில் போடப்படுமோ என்று அஞ்சுவதாக அனைத்து இந்திய பெண்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஷைஸ்தா ஆம்பர் தெரிவித்துள்ளார்.
நிராகரிப்பு
2008ம் ஆண்டில் ஷைஸ்தா தலைமையிலான பெண்கள் அமைப்பு, இஸ்லாமிய சட்ட ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் செய்து பெண்களுக்கு கூடுதல் உரிமை அளிக்குமாறு கோரியது. ஆனால் அதன் கோரிக்கையை அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்துவிட்டது.