பெண் டிரைவர்கள், டூவீலர்கள் மற்றும் விவிஐபி கார்களுக்கு விதி விலக்கு.. கெஜ்ரிவால்
டெல்லி: ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை டெல்லியில் அமல்படுத்தப்படவுள்ள ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண் வாகன போக்குவரத்து மாற்றத்திலிருந்து 20 வகையினருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புகை மாசு அதிகரித்துக் கொண்டே போவதால் அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் டெல்லி அரசு இறங்கியுள்ளது. அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக ஒற்றைப் படை பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ஒரு நாளும், இரட்டைப் படை எண் வாகனங்களுக்கு ஒரு நாளும் என வாகனங்களை ஓட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு டெல்லி வாகனங்களுக்கு மட்டும் பொருந்தாது என்றும் பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்...
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதை மீறவோருக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும்.
விதிவிலக்கு...
இந்த நிலையில் 20 வகையான வாகனங்களுக்கு இந்த உத்தரவிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவை...
அனைத்து வகையான டூவீலர்கள், சிஎன்ஜி வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைபிரிட் கார்கள், பெண் டிரைவர்கள் ஓட்டும் வாகனங்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசயுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனம், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆதாரங்கள்...
அதேபோல், மருத்துவ தேவைகளுக்காக விதிகளை மீறி வாகனங்களை எடுத்துச் செல்வோர் உரிய ஆதாரங்களை எடுத்துச் செல்லவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.