இலவச புடவை வாங்க சண்டை.. உடுத்தியிருந்த சேலையை கிழித்த பெண்கள்- வைரல் வீடியோ
தெலுங்கானாவில் அரசால் வழங்கப்பட்ட இலவச புடவை வாங்குவதற்கு பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
ஹைதராபாத் : தெலுங்கானா அரசால் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கிக் கொள்ள முண்டியடித்த பெண்கள் சாலையிலேயே குடுமியை பிடித்துக் கொண்டு சண்டையிட்ட காட்சிகள் வைரலாகியுள்ளது.
நவராத்திரி விழாவின்போது கொண்டாடப்படும் பதுகம்மா விழாவையொட்டி பெண்களுக்கு இலவச புடவை வழங்கப்படும் என்று சுதந்திர தினத்தின்போது தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
அதன்படி 500 டிசைன்கள் கொண்ட ரூ. 222 கோடியில் 1.04 கோடி புடவைகள் குஜராத் மாநிலத்தில் இருந்தும், தெலுங்கானா கைத்தறி நெசவாளர்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த புடவைகளை நேற்று கொடுக்க தொடங்கினார். இதற்காக பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
|
முண்டியடித்து...
புடவை கொடுக்கத் தொடங்கியதுமே பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பெண்கள் குடுமிகளை இழுத்து கொண்டு சாலையிலேயே சண்டையிட்டனர். இதை தடுக்க சென்ற பெண் காவலரும் முடியாததால் எப்படியோ போங்க என்பது போல் விட்டுவிட்டார்.
|
தரம் இல்லை
அப்படி முண்டியடித்து வாங்கியும் அந்த புடவை தரம் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் புடவைகளை சாலையில் போட்டு எரித்தனர்.
|
குப்பைத் தொட்டியில்..
மேலும் சிலர் அந்த புடவையால் வாகனங்களை துடைத்தும் , குப்பை தொட்டிகளில் வீசியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இன்னும் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
|
மலிவானது...
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்கள் கூறுகையில், நாங்கள் தினக்கூலிகள். எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 400 வழங்கப்படுகிறது. முதல்வர் இலவச புடவை அறிவித்ததால் அதை வாங்க வேலைக்கு செல்லாமல் இங்கு வந்தோம். ஆனால் இவர்கள் அளித்த புடவை ரூ.100-ஐவிட குறைவாக இருக்கும். இதற்காக நாங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம். சிலர் சண்டையிலும் ஈடுபட்டனர்.
அவமானம்
அந்த புடவைகள் ரூ.50 முதல் ரூ60 வரை மட்டுமே இருக்கும். தரம் குறைவான புடவைகளை கொடுத்து முதல்வர் எங்களை அவமானப்படுத்திவிட்டார். இந்த புடவைகள் தரையை துடைக்கக் கூட தரமில்லாதவை என்றனர் பெண்கள்.