பேயை விரட்ட செருப்பில் தண்ணீர் ஊற்றி குடிக்க வேண்டும்.. ராஜஸ்தானில் 3 'டுபாக்கூர்கள்' கைது
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் உள்ள கோவில் ஒன்றில் பேயை விரட்டுவதாகக் கூறி, செருப்பில் நீரை ஊற்றி குடிக்கச் சொன்னதாக மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பங்கயற்கண்ணி மாதா கோயில் உள்ளது. இந்தக் கோயில் பேய் விரட்டுவதற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு பேய் பிடித்ததாக கருதப்படுபவர்கள் அழைத்து வரப்படுவர்.
பேயை விரட்ட...
அவர்களுக்கு செருப்பில் தண்ணீர் ஊற்றி குடிக்க வைக்கப்படுவர். இதன் மூலம் அவர்களது உடலில் உள்ள பேயை விரட்ட முடியும் என்பது அவர்களது நம்பிக்கை.
மக்கள் நம்பிக்கை...
இந்தக் கோயிலுக்கு பில்வாராவின் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் பேயை விரட்டுவதற்காக வருகின்றனர்.
போலீசாருக்குத் தகவல்...
இந்நிலையில், இது குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி பெண் ஒருவருக்கு செருப்பில் தண்ணீர் அளிக்கப்படுவதைக் கண்டனர்.
கைது...
விரைந்து அந்த செயலைத் தடுத்த போலீசார், கோயிலில் பேய் ஓட்டும் பணியில் உள்ள மூன்று நபரையும் கைது செய்தனர். அதோடு, இனிமேல் இது போன்ற மூட நம்பிக்கைகளை அந்த கோயிலில் தொடராமல் இருக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்தினரிடம் போலீசார் எச்சரித்துச் சென்றனர்.