மேற்கு வங்கத்தில் பெண்கள் ஸ்பெஷல் ரயிலில் ஆண்களுக்கு இடம் - பெண்கள் போராட்டம்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் சிறப்பு ரயிலில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இங்குள்ள பரசட் மற்றும் செலடா பகுதிக்கு இடையில் மாத்ரிபூமி பெண்கள் சிறப்பு ரயிலில் கடந்த 15 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அந்த ரயிலின் 3 பெட்டிகளில் ஆண், பெண் இரு பாலாரும் செல்லலாம் என அறிவிப்பு வெளியானது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என கடந்த 17 ஆம் தேதி அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்ற ரயில்வே போலீசார் மீது சில பெண்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில் ஆறு போலீசார் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், மாத்ரிபூமி பெண்கள் சிறப்பு ரயிலின் அனைத்து பெட்டிகளும் பெண்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று காலை 10 மணியளவில் இங்குள்ள மத்யம்கிராம், டட்டாபுக்கூர், பிராட்டி, பமங்காச்சி, ஹிரிதயப்பூர் ஆகிய ரயில் நிலையங்களின் அருகாமையில் தண்டவாளத்தை மறித்து அமர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடையே சமரசம் பேசிய ரயில்வே அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் மேற்கண்ட ரயில் நிலையங்களின் வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போராட்டம் முடிந்த பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதமாக அந்த ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.