மும்பை ஹாஜி அலி தர்காவில் 5 ஆண்டுகளுக்குப் பின் பெண்கள் வழிபாடு!
மும்பையில் உள்ள பிரபலமான ஹாஜி அலி தர்காவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு நடத்தினர். இதனால் இஸ்லாமிய பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக சமத்துவம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: நீதிமன்ற போராட்டம், ஆர்ப்பாட்டம் என கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் குழுவினர் மும்பை ஹாஜி அலி தர்ஹாவில் இன்று பிற்பகலில் உள்ளே சென்று வழிபாடு நடத்தினர்.
மும்பையில் அரபிக் கடலை ஒட்டியுள்ள ஹாஜி அலி தர்காவில் பிற்பகல் 3 மணி அளவில் பெண்கள் குழுவினர் வழிபாடு நடத்தியதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சமத்துவம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாரதிய இஸ்லாம் மகிளா அந்தோளன் அமைப்பின் இணை நிறுவனர் நூர்ஜஹான் எஸ்.நியாஸ் கூறியதாவது:
தற்போது இந்த தர்காவில் பெண்கள் வழிபாடு வழக்கமாகி விட்டது. நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்காமல் அங்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பினோம்.கடந்த 2012-ம் ஆண்டு வரை இத்தர்காவில் குறிப்பிட்ட சில பகுதி வரை சென்று வழிபட்டு வந்தோம்.
ஆனால் அதனை திடீரென நிறுத்தி விட்டனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை அணுகியும், தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இந்த உரிமையை மீட்டுள்ளோம் என்றார் அவர்.
தர்கா நிர்வாகிகள் சில மாற்றங்கள் செய்வதற்காக 4 வாரங்கள் அவகாசம் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் தர்காவில் சென்று வழிபாடு நடத்தியதாகவும், அமைதியை வலியுறுத்தி பிரார்த்தனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 24-ம் தேதி பெண்களையும் தர்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களையும் ஆண்களுக்கு நிகராக நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்நிலையில் மும்பை ஹாஜி அலி தர்காவில் இஸ்லாமிய பெண்கள் வழிபாடு நடத்தி இருப்பது அந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.