சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு பதிலளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க தயாராக உள்ளதாக கேரள அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க தயாராக உள்ளதாக கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதன்மூலம் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது புதிய திருப்புமுனையாக கருதப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கின் விசாரணை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக இன்று முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்ய விரும்பும் விபரங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தொடர்புடைய வாதி மற்றும் பிரதிவாதிகளை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.