ஐஐடி கவுன்சில் வரலாற்றில் முதல் முறையாக... 2 பெண் விஞ்ஞானிகள் நியமனம்
டெல்லி: இதுவரை ஆண்கள் மட்டுமே இருந்து வந்த ஐ.ஐ.டி. கவுன்சிலில் முதல் முறையாக இரண்டு பெண் விஞ்ஞானிகள் இடம்பெறுகிறார்ள்.
இந்தியாவில் மொத்தம் 16 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களின் உச்ச நிர்வாக அமைப்பு தான் ஐ.ஐ.டி. கவுன்சில். இந்த கவுன்சிலில் இதுவரை ஆண்கள் மட்டுமே அங்கம் வகித்து வந்தனர். இந்நிலையில் 2 பெண் விஞ்ஞானிகள் இந்த கவுன்சிலில் சேர்க்கப்படுகிறார்கள்.
டெஸ்ஸி தாமஸ் மற்றும் விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் ஆகிய அந்த 2 விஞ்ஞானிகளை கவுன்சிலில் சேர்த்து அதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டெஸ்ஸி தாமஸ் இந்தியாவின் ஏவுகணை திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். மேலும் அக்னி-4 ஏவுகணை திட்டத்தின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.
விஜயக்ஷ்மி ரவீந்திரநாத் தேசிய மூளை ஆய்வு மையத்தை அமைக்க உதவியவர். நியூரோஜெனரேட்டிவ் கோளாறுகள் குறித்த அவரது ஆராய்ச்சி மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
இது குறித்து மனிதவளமேம்பாட்டு துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அறிவியல் ஆண்களுக்கு மட்டுமே உரியது இல்லை என்பதை நிரூபிக்கவே ஐஐடி கவுன்சிலில் 2 பெண் விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆய்வில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் செயல்பட முடியும் என்றார்.