20 ஆண்டு இஸ்ரோ சேவை.. சந்திரயான் 2 குழுவில் முக்கிய பங்கு.. கலக்கிய இரு பெண்மணிகள்!
ஸ்ரீஹரிகோட்டா: உலகமே உற்றுநோக்கும் நிகழ்வாக இருக்கும் சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் இரு பெண்களின் பங்களிப்பு அளப்பரியது ஆகும்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ 978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.
அதன்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன்கள் கொடுக்கப்பட்டன.
கோளாறுகள்
அச்சமயம் ராக்கெட்டில் இருந்த எரிபொருள் நிரப்புவதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன் விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு இன்று பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
மங்கல்யான்
இதற்கான 20 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு பெயரும் புகழும் கிடைக்கும் சம்பவமான சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க வனிதா, ரிது மங்கல்யான் ஆகிய இரு பெண்களின் பங்களிப்பு மிகப் பெரியதாகும்.
திட்ட இயக்குநர்
கடந்த 20 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றி வருகின்றனர். ரிது மங்கல்யான் உள்ளிட்ட பல ஏவுகணை திட்டங்களில் பணியாற்றியுள்ளார். அது போல் வனிதாவும் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
வரலாற்றுச் சாதனை
இந்த திட்டத்தில் 30 சதவீதம் பேர் பெண்கள்தான். கடந்த 2014-இல் மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் வெற்றி பெற்றதற்கு பெண்கள் குழுவின் பங்களிப்பால்தான் என்பதை யாரால் மறக்க முடியும். இந்த சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டால் இந்த திட்டத்தில் பணியாற்றிய பெண் விஞ்ஞானிகள் பெரும் வரலாற்றுச் சாதனையை படைப்பர்.
ராக்கெட் பெண்மணி
மேலும் விண்வெளித் துறையில் ஆண் ஆதிக்கம் இருக்கிறது என்பதும் உடைக்கப்படும். திட்ட இயக்குநராக உள்ள ரிது மங்கல்யான் லக்னோவை சேர்ந்தவர். மங்கல்யான் துணை இயக்க இயக்குநராக முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவின் ராக்கெட் பெண்மணிகளில் ஒருவர்.
இஸ்ரோ
வனிதாவும் இஸ்ரோவில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த 2006-ஆம் ஆண்டு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை பெற்றுள்ளார். சந்திரயான் 2 விண்கலம் நிலவை அடைந்து அதற்கு மேல் செயல்படுவது வரை வனிதாவின் பொறுப்புதான்.