பீகார்: குடும்பச் சண்டையில் ஒருவர் மீது ஒருவர் ஆசிட் வீசிக் கொண்ட சகோதரிகள்
பாட்னா: பீகாரில் குடும்பச் சண்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் ஒருவர் மீது ஒருவர் ஆசிட் வீசிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சவ்பால் மாவட்டம் கட்டையா கிராமத்தைச் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ஒன்றில் அண்ணன், தம்பியைத் திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்கள் அவர்கள்.
அக்கா - தங்கை உறவு முறை கொண்ட அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சமையல் செய்து கொண்டிருந்த போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடுங்கோபத்தில் இருந்த இருவரும் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசியுள்ளனர். இதில் ஒரு பெண்ணிற்கு முகத்திலும், மற்ரொருவருக்கு கழுத்திலும் காயம் உண்டானது.
உடனடியாக அவர்கள் இருவரையும் குடும்பத்தார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த அப்பெண்களின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒருவர் மீது ஒருவர் ஆசிட்டை வீசிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.