கணவனை எட்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்த பெண்ணுக்கு 30 வருட சிறை தண்டனை
கணவனை எட்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
சண்டிகர் : கணவனை எட்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்த பெண்ணிற்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் வசித்து வந்தவர் பல்ஜித். இவரது மனைவி பூஜா. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாட்டால் சண்டை நடக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சண்டையில், கோபமடைந்த பூஜா, தனது கணவர் பல்ஜித்தை கத்தியால் குத்தியும், உடலை எட்டு துண்டுகளாக வெட்டியும் கொலை செய்தார். பின்னர் தனது கணவரை காணவில்லை என்றும் நாடகமாடி உள்ளார்.
இதனையடுத்து பல்ஜித்தின் சகோதரர் குல்ஜித் தனது சகோதரரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். மேலும், இதில் தனது அண்ணனின் மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். விசாரணையில், பல்ஜித்தை அவரது மனைவி பூஜாவே கொலை செய்து எட்டு துண்டுகளாக வெட்டி வீட்டில் பல பகுதிகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேறொருவரோடு ஏற்பட்ட கள்ளத்தொடர்பே இந்தக் கொலைக்கு காரணம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பூஜாவிற்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பூஜாவை போலீஸார் சிறையில் அடைத்தனர்.