மாதவிடாய் நேரத்தில் சமையல் செய்தால் சாபம்.. பெண்கள் நாய்களாக பிறப்பார்கள்.. சாமியார் சர்ச்சை!
மாதவிடாய் நேரத்தில் சமையல் செய்யும் பெண்கள் நாய்களாக மறு ஜென்மத்தில் பிறப்பார்கள் என்று சுவாமி க்ரூஷ்னாஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்: மாதவிடாய் நேரத்தில் சமையல் செய்யும் பெண்கள் நாய்களாக மறு ஜென்மத்தில் பிறப்பார்கள் என்று சுவாமி க்ரூஷ்னாஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள பூஜ் நகரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் கல்லூரியில் கடந்த வாரம் 68 மாணவிகளுக்கு அவர்களின் ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை தனி அறையில் அழைத்து சென்று பெண் விடுதி ஊழியர்கள் இந்த சோதனையை செய்துள்ளனர்.
இதனால் அந்த பெண்கள் மன ரீதியாக பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளானார்கள். அவர்கள் மாதவிடாய் நாட்களில் விடுதியில் உள்ள சமையல் அறைக்குள் வந்தார்களா என்பதை சோதிக்கும் வகையில் இந்த சோதனை செய்யப்பட்டது.
கைது
2020ம் ஆண்டில் இந்தியாவில், ஒரு கல்லூரியில் இப்படி நடப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் உருவாக்கியது.இந்த சம்பவத்திற்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக போலீசில் 4க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்தனர்
அவருடன் சேர்த்து 5 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி நிர்வாகி ரமீலா பென், புயூன் நைனா மற்றும் அனிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கல்லூரி பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. இதன் மடாதிபதி சுவாமி க்ரூஷ்னாஸ்வரூப் ஆவார். இந்த கல்லூரியில் நடந்த இந்த மோசமான சோதனைக்கு சுவாமி க்ரூஷ்னாஸ்வரூப் ஆதரவு தெரிவித்து பேசி உள்ளார். அதில், பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சமையல் செய்ய கூடாது.
நாய்கள் எப்படி
மாதவிடாய் நேரத்தில் சமையல் செய்யும் பெண்கள் நாய்களாக மறு ஜென்மத்தில் பிறப்பார்கள். அதை உட்கொள்ளும் ஆண்கள் மறு ஜென்மத்தில் எருமைகளாக பிறப்பார்கள். நீங்கள் என் கருத்தை வெறுக்கலாம். ஆனால் இது சாஸ்திரத்தில் இருக்கிறது. பெண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். இதனால் ஆண்களும் கொஞ்சம் சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
சமையல் செய்ய வேண்டும்
எனக்கு இதை சொல்ல விருப்பமில்லை. ஆனால் ஆண்களும் சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சமையல் அறை பக்கம் செல்லவே கூடாது. இதை எல்லோரும் நினைவில் வைக்க வேண்டும். நம்முடைய இந்து சாஸ்திரம் இதைத்தான் சொல்கிறது என்று, சுவாமி க்ரூஷ்னாஸ்வரூப் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.