மகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு
சென்னை: மகாராஷ்டிராவில் என்.பி.ஆரை (NPR) செயல்படுத்துவதை தடுக்க மாட்டேன் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கும் நிலையிலும் உத்தவ் தாக்ரே இவ்வாறு கூறியுள்ளார்.
சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி வேறுபட்டவை மற்றும் என்.பி.ஆர் வேறுபட்டது. சி.ஏ.ஏ செயல்படுத்தப்பட்டால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. என்.ஆர்.சி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்று தாக்கரே ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சர்ச்சைக்குரிய எதுவும் இல்லாததால் மாநிலத்தில் என்.பி.ஆர் நடக்கும், என்.ஆர்.சி செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன். என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இந்துக்கள் அல்லது முஸ்லிம்களை மட்டுமல்ல, ஆதிவாசிகளையும் பாதிக்கும். என்.பி.ஆர் என்பது, ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும்தான். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இது நடக்கும். ஆனால் யாரும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை, என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிரா தேர்தலுக்கு பின்னர், சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி முறிந்தது. எனவே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த நவம்பரில், ஆட்சியை பிடித்துள்ளது சிவசேனா. இதனால்தான், இது பொருந்தாக் கூட்டணிபோல மாறிவிட்டது.
பல கொள்கைகளில் பாஜகவுடன், சிவசேனா ஒத்துப்போகிறது. குறிப்பாக மத ரீதியான விஷயங்களில். எனவே, மகாராஷ்டிராவில் கூட்டணிக்குள் குழப்பம் அதிகரித்தபடி உள்ளது. இருப்பினும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படாது என அவர் கூறியுள்ளது கூட்டணி நிர்பந்தங்களால்தான் என கூறப்படுகிறது.