ராமர் பாலத்திற்கு சேதமில்லாமல் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றுவோம் - மத்திய அரசு
ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் அகற்றப்பட மாட்டாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
தாக்கல் செய்து உள்ள பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவித்து, அதற்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது மனுதாரர்களின் கோரிக்கை.
ராமர் கட்டிய பாலம்
ராமபிரான் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கையைச் சென்றடைய உருவாக்கப்பட்டதுதான் இப்பாலம் என்று புராணங்கள் கூறுகின்றன. ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது என்று ஒருத்தரப்பினரும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ராமர் பாலம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவிருந்தனர்.
சேதுவிற்காக ராமர் பாலம்
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் சுப்ரமணியசுவாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
இவ்வழக்கு கடந்த நவம்பர் மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட மூவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சுவாமி, இவ்வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசுக்கு உத்தரவு
மத்திய அரசு வழக்கறிஞரோ சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள் 6 வார காலத்திற்குள் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராமர் பாலத்தை இடிக்கமாட்டோம்
அப்போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சேது சமுத்திரத்திற்காக ராமர் பாலத்தை இடிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளது. ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசின் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டம் கடந்து வந்த பாதை
சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுக்கு பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டார். அப்போது ராமர் பாலம் தகர்க்கப்படாமல் இருக்கவும் திட்டமிட்டார். 2004ம் ஆண்டு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு மத்தியில் அமைந்த உடன் ராமர் பாலத்தை இடித்து சேதுசமுத்திர திட்டத்தை அமல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.