பாபர் மசூதி வழக்கு விசாரணையிலிருந்து அத்வானியை விடுவிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் தடாலடி
பாபர் மசூதி வழக்கில் சிபிஐ தாமதமாக மேல்முறையீடு செய்ததால் தங்களை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற அத்வானியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் புறம் தள்ளிவிட்டது.
டெல்லி: விசாரணை நடத்தாமலேயே, பாபர் மசூதி வழக்கிலிருந்து அத்வானியை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சதி திட்டம் தீட்டியதாக பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், இவர்கள்தான் பாபர் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டினர் என்பதற்கான ஆதாரம் இல்லை என கூறி 2001ல் அத்வானி உள்ளிட்டோரை, விடுதலை செய்ததது. மேல்முறையீட்டின்போது, அலகாபாத் ஹைகோர்ட்டும் 2010ல் அந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு வெளியான 9 மாதங்கள் கழித்து, சி.பி.ஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரிக்க கூடாது என்றும், தங்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அத்வானி உள்ளிட்ட, இவ்வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
சிபிஐ தாமதமாக மேல்முறையீடு செய்ததால் அந்த அடிப்படையில் தங்களை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக இருந்தது. ஆனால், இதுபோன்ற டெக்னிக்கல் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதையடுத்து அத்வானி உள்ளிட்டோர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.