மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது- ஆளுநரிடம் தெரிவித்தது பாஜக
மும்பை: மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநர் கோஷ்யாரியின் அழைப்பை பாஜக நிராகரித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களாகிவிட்டன. ஆனால் எந்த கட்சியுமே ஆட்சி அமைக்க முன்வரவில்லை.
இதனையடுத்து 105 இடங்களைப் பெற்ற பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பாஜக உடனே ஏற்காமல் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தியது.
பின்னர் இன்று மாலை பாஜக சட்டசபை குழு தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக தலைவர்கள் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லை என ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பெரும்பான்மைக்கான எண்ணிக்கை எங்களுக்கு இல்லை; அதனால் ஆட்சி அமைக்க இயலாது என ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம்.
தேர்தலில் பாஜக-சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கத்தான் மக்கள் வாக்களித்தனர். இதனை மதிக்காமல் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தால் எங்களது வாழ்த்துகள் என்றார்.