மக்கள் பிரச்சினை இல்ல, முதுகு வலியாலே ராஜினாமா... இலவச சிகிச்சைக்காக முடிவை மாற்றிய பாஜக எம்பி
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான மன்சுக் வசவா, தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பருச் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக இருப்பவர் மன்சுக் வசவா. குஜராத்தில் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1998ஆம் ஆண்டு முதல் பருச் தொகுதியில் எம்பியாக உள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் பழங்குடியினர் விவகார இணை அமைச்சராகவும் இவர் இருந்தார். இருப்பினும், அவர் 2016 ஜூலை மாதம் அமைச்சர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார்.
திடீர் ராஜினாமா
இந்நிலையில், மன்சுக் வசவா நேற்று திடீரென்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்திலுள்ள 121 கிராமங்களைச் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் காரணமாகப் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மன்சுக் வசவா பதவி விலகுவதாகவும் செய்திகள் பரவின.
முதுகு வலியே காரணம்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மன்சுக் வசவா, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் குறித்த பிரச்சினை காரணமாக பதவி விலகுவதாக வெளியான தகவலை முற்றிலுமாக மறுத்தார். மேலும், "நான் பதவி விலகியதற்கு எனது உடல்நிலையே காரணம்,. எனக்கு முதுகு வலியும் கழுத்து வலியும் உள்ளது. மக்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படும்போது பதவி விலகுவதே சரியான முடிவாக இருக்கும் என்று கருதினேன்.
இலவச சிகிச்சை
இது குறித்து நான் குஜராத் முதலமைச்சர், பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசித்தேன். நான் தொடர்ந்து எம்.பி.யாக இருந்தால் மட்டுமே முதுகுவலி மற்றும் கழுத்து வலிக்கு இலவச சிகிச்சை கிடைக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறினர். நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால் இலவச சிகிச்சை எனக்குக் கிடைக்காது. மூத்த தலைவர்கள் என்னை ஓய்வெடுக்கச் சொன்னார்கள். எனது பணியைச் சரியாக மேற்கொள்ளக் கட்சி சார்பில் ஆள்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதனால் நான் எனது முடிவைத் திரும்பப் பெறுகிறேன்" என்றார்.
பாஜகவால் பழங்குடியினருக்கு நன்மை
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் குறித்துப் பேசிய அவர், "இப்பிரச்சினையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. எனக்குக் கட்சியுடனோ அரசுடனோ எந்தப் பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் முந்தைய அரசுகளைவிட பாஜக ஆட்சியின் கீழேயே பழங்குடியினர் அதிகம் பயனடைந்தனர். எனது உடல்நிலை தொடர்பான பிரச்சினையில் கட்சி இப்போது எனக்கு உறுதியளித்துள்ளதால், நான் தொடர்ந்து எம்பியாக செயல்பட முடிவு செய்துள்ளேன்" என்றார்.