இந்தியா தலைகுனிய விட மாட்டேன்.. "பாரத் மாதா கி ஜே" கோஷம் விண்ணை பிளக்க சூளுரைத்த மோடி
Recommended Video
ஜெய்ப்பூர்: இந்தியாவை தலைகுனிய விட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், சுரு பகுதியில், இன்று மதியம், 2.30 மணியளவில், முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் எழுச்சியுடன் உரையாற்றியதை கவனிக்க முடிந்தது.
மோடி கூறியதாவது: உங்கள் முகத்தில் காணப்படும் உற்சாகத்திற்கும், எழுச்சிக்கும், என்ன காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
தலைகுனிய விட மாட்டேன்
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். இந்த நாடு மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்பதுதான் அது. நமது நாட்டை எந்த காலத்திலும் நான் தலை குனிய விடமாட்டேன். நாட்டை விட பெரியது எதுவுமே கிடையாது. நாட்டின் மேம்பாட்டுக்காக பாடுபடக்கூடிய ஒவ்வொருவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
|
ஒரே ரேங்க்
இந்திய விமானப்படைக்கு தலைவணங்குகிறேன். நான் உங்களுடைய முதன்மை சேவகனாக ஒரு வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி ஒரே ரேங்க் ஒரே பென்ஷன் என்ற திட்டத்தை ராணுவ வீரர்களுக்கு கொண்டுவந்துள்ளேன். 20 லட்சம் ராணுவ வீரர்கள் இதனால் பலன் பெற்றுள்ளனர். எங்களை பொறுத்தளவில், தனிப்பட்ட நபர்களை விட (தலைவர்களைவிட) கட்சி பெரியது, கட்சியை விடவும் இந்த நாடு பெரியது. இதுதான் எங்களுடைய கொள்கை.
|
விவசாயிகள் நலன்
ஜெய் ஜவான், ஜெய் கிஷான், ஜெய் விக்ஞான், என்பதே எங்களது கோஷம். இதனால்தான் ஒரு கோடி விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் பலன்களை பெற்றுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் 7.5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்படும். இடைத்தரகர்கள் எதுவுமே இன்றி நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். பணம் வந்து சேர்ந்து விட்டது என்பதை செல்போன் மெசேஜ் தகவல் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, திரண்டிருந்த கூட்டத்தினர் "மோடி.. மோடி" என கோஷமிட்டனர்.
வெற்றி கொண்டாட்டம்
தனது உரையை துவக்குவதற்கு முன்பாகவும், நிறைவு செய்யும்போதும், "பாரத் மாதா கி ஜே" என்ற கோஷத்தை மோடி எழுப்பினார். இதையடுத்து கூட்டத்தினரும் பதிலுக்கு அவ்வாறு கோஷமிட்டனர். பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின் வெற்றிக்கொண்டாட்டம் போலவே இந்த கூட்டம், காணப்பட்டது. மோடி நின்றிருந்த மேடையின் பின் பக்கத்தில், காஷ்மீரில் சமீபத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த 40 சிஆர்பிஎப் படைவீரர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.