காவிரி நதிநீர் வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது; உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு, நேற்று முதல் தினசரி நடந்து வருகிறது. இன்று கர்நாடக தரப்பில் வாதிடுகையில், "தமிழகம் சாகுபடி பகுதிகளை அதிகரித்ததால் அதிகபடியான நீரை கேட்கிறது. ஒப்பந்தத்தில் உள்ள அளவை விட சாகுபடி பகுதிகளை தமிழகம் அதிகரித்துள்ளது. ஒப்பந்தத்தை மீறுவது தமிழக அரசு தான்" என்று கூறப்பட்டது.
அப்போது, தலையிட்ட நீதிபதிகள், நதி நீர் பிரச்னையில் மாநிலங்கள் சண்டையிட்டு கொள்வதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் அங்கம் தான் என கூறினர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், காவிரி தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரணை நடத்தும். மீண்டும் காவிரி தீர்ப்பாயத்திற்கு அனுப்ப மாட்டோம். நீதிமன்றமே அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும். நடுவர் மன்றத்தில் வைத்த வாதங்களை மீண்டும் வைக்க வேண்டும். வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறினார்.
முன்னதாக உச்சநீதிமன்றத்திற்கு இதை விசாரிக்க அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியிருந்ததையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. எனவே வழக்கில் இனி தாமதம் ஏற்படாது என தெரிகிறது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்து மூலம் தமிழகத்தின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தனபாலன் கூறியுள்ளார்.