வேலை பார்ப்பதுதான் சிறந்த வலி நிவாரணி.. நவீன் பட்நாயக்கின் அர்ப்பணிப்பு.. நெகிழும் வி.கே.பாண்டியன்
புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் இன்று தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்த தருணத்தில், அவரைப் பற்றிய பல பணி அனுபவங்களைச் சொல்ல, வி. கார்த்திகேய பாண்டியனை விடவும் வேறு ஒரு அதிகாரி இருக்க முடியாது. ஆம்.. நவீன் பட்நாயக்கின், தனிச் செயலாளராக பதவி வகிப்பவர் வி.கே.பாண்டியன். அவரது வலது கரம் போல இருப்பவர்.
நவீன் பட்நாயக் அரசு கொண்டு வந்த, 5T திட்டத்திற்கு, செயலாளரும் வி.கே.பாண்டியன்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் காலை 9 மணி இருக்கும். முதல்வர் நவீன் பட்நாயக்கிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. முதலமைச்சருக்கு பல் வலி இருப்பதாகவும், ரூட் கேனல் (RCT) சிகிச்சைக்காக கேபிட்டல் மருத்துவமனைக்கு செல்ல விரும்புகிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர் காலை 10.30 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே உள்ள ஷெட்யூல்படி,முதல்வர் காலை 11.30 மணிக்கு கான்பரன்ஸ் ஹாலில் ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. எனவே அந்த நிகழ்ச்சியையும், அன்றைய நாள் முழுவதுமான முதல்வரின் நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்க திட்டமிட்டேன்.
நான் அலுவலகத்தை அடைந்ததும், முதல்வரின் கால அட்டவணையை மாற்றத் தொடங்கினேன். ரூட் கேனல் சிகிச்சைக்கு பிறகு, ஒருவருக்கு நிச்சயமாக ஒரு நாள் ஓய்வு தேவைப்படும். எனக்கு 20 வயதாக இருந்தபோது, ரூட் கேனல் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு நான் எப்படி கல்லூரிக்குச் சென்றேன் என்பதை நான் ஒரு புன்னகையுடன் நினைவு கூர்ந்தேன்.
ஆனால் அப்போது எனக்கு ஒரு தகவல் வந்தது. முதல்வர் மருத்துவமனையில் ரூட் கேனல் சிகிச்சையை முடித்துக் கொண்டு நேரடியாக, மீட்டிங்கில் பங்கேற்க வந்து கொண்டிருந்தார். நான் அதிர்ச்சியடைந்தேன். பல்மருத்துவரின் சீட்டில் இருந்து ஒருவர் எவ்வாறு நேரடியாக அலுவலகத்திற்கு வர முடியும்?! எனக்கு 20 வயதாக இருந்தபோது ரூட் கேனல் சிகிச்சைக்கு பிறகு வலி ஏற்பட்டதையும், வீங்கிய வாயுடன் இருந்ததையும் சட்டென நினைவு கூர்ந்தேன்.
அதிர்ச்சி மற்றும் பிரமிப்புடன் இருந்தபோது, முதல்வரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் 11.30 மணிக்கு ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை நினைவுகூர்ந்தார்.
இதையடுத்து, நான் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தை மறுபடி கூட்ட ஏற்பாடு செய்தேன். முதல்வர் ஐயா வழக்கம்போல ஆய்வுக் கூட்டத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு நான் அவரிடம் கேட்டேன், "ஐயா, நீங்கள் இன்று காலை ஓய்வெடுத்திருக்கலாம், குறிப்பாக ரூட் கேனல் சிகிச்சை மற்றும் பல்வலி இருக்கும்போது உங்களுக்கு ஓய்வு அவசியம்." என்றேன்.
அவர், "என்னால் வலியைத் தாங்க முடியும், அதனால் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். இந்த வலியை விட பெரிய வலியோடு சிலர் இருக்க கூடும். நம்முடைய இந்த நேரம் அவர்கள் வலியை அகற்ற தேவைப்படும். " "வேலைதான் சிறந்த வலி நிவாரணி, மிஸ்டர். பாண்டியன்," என்று அவர் சிரித்தார். இந்த சிறந்த வலி நிவாரணியால் நாங்கள் அப்படியே மவுனமானோம். இதற்கிடையில் முதல்வர் தனக்கே உரித்தான புன்னகையுடன் நடந்து சென்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.