உலக புற்றுநோய் தினம்: புற்றுநோயுடன் போராடி வென்ற பிரபலங்கள் கவுதமி, யுவராஜ் சிங், மம்தா மோகன்தாஸ்
சென்னை: மிகவும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோயை தடுத்து அதனை பரவ விடாமல் தடுக்கும் வகையில் இன்று உலக புற்றுநோய் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் தீம் எனப்படும் கருப்பொருளை வைத்து இந்த நாளில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல இந்த வருடத்தின் தீம் 'என்னால் முடியும், நம்மால் முடியும்' என்பதாகும்.
அந்த வகையில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையை அளித்த இந்தியப் பிரபலங்கள் குறித்து இங்கே காணலாம்.
கவுதமி
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்த நடிகை கவுதமியை மார்பக புற்றுநோய் தாக்கியது. புற்றுநோயால் சோர்ந்து விடாத கவுதமி தனது இடைவிடாத போராட்டத்தால் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் கவுதமி சமூக அக்கறையுடன் கலந்து கொள்கிறார்.
ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் புற்றுநோயில் இருந்து மீண்டுவந்த கவுதமி தான் நிஜமான ஹீரோ என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது. பாபநாசம் படத்தின் மூலம் திரையில் மறுபிரவேசம் செய்த கவுதமி தற்போது புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.
யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று புகழப்படும் வீரர் யுவராஜ் சிங் இந்தக் கொடிய புற்றுநோயால் கடந்த 2011 ம் ஆண்டு பாதிக்கப்பட்டார். அவரின் இடது நுரையீரலை இந்த நோய் தாக்கியது. தனது தளராத நம்பிக்கை மற்றும் அவரது அன்னையின் அன்பு காரணமாக 2012ம் ஆண்டில் இந்த நோயிலிருந்து அவர் மீண்டு வந்தார்.
அவரது இந்த தன்னம்பிக்கையான மீட்சியை கண்டு இந்த உலகமே வியந்தது. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த அதே வருடம் ட்வெண்டி-20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். மேலும் 'தி டெஸ்ட் ஆப் மை லைப்' என்ற பெயரில் தனது அனுபவங்களை தொகுத்து ஒரு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
மனிஷா கொய்ராலா
பம்பாய் நாயகி மனிஷா கொய்ராலாவையும் இந்த கொடிய நோய் விட்டு வைக்கவில்லை. கடந்த 2012 ம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் மனிஷா பாதிக்கப்பட்டார். அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் 2013ம் ஆண்டு மே மாதத்தில் அவர் இந்த நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் நடித்து வரும் மனிஷா இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார்.
மம்தா மோகன்தாஸ்
தென்னிந்திய நடிகை மற்றும் பாடகியான மம்தா மோகன்தாசை கடந்த 2010 ம் வருடம் புற்றுநோய் தாக்கியது. அதிலிருந்து மீண்டு கடந்த 2011 ம் ஆண்டு நண்பரும், தொழிலதிபருமான பிரஜித் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். இதன் பின்னர் மீண்டும் அவரை புற்றுநோய் தாக்கியது தற்போது மீண்டும் அதிலிருந்து குணமடைந்துள்ளார்.
இதன் பின்னர் மீண்டும் நடிப்புத் தொழிலுக்கு திரும்பிய மம்தா தற்போது மல்லுவுட்டின் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார். கடைசியாக மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்புடன் இவர் இணைந்து நடித்த 2 கண்ட்ரீஸ் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
இன்னொசென்ட்
மலையாள மூத்த நடிகர்களில் ஒருவரான இன்னொசென்ட் 2013 மற்றும் 2015 ம் ஆண்டுகளில் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் 4 மாதங்கள் டெல்லியில் உள்ள எயிம்ஸ்மருத்துவமனையில் கடுமையான சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் கடந்த 2015 டிசம்பரில் தான் மீண்டு விட்டதாக சமூக வலைதளம் ஒன்றில் அறிவித்தார்.
அனுராக் பாசு
மர்டர், கேங்ஸ்டர் மற்றும் பர்பி போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு புற்றுநோயால் கடந்த 2004 ம் ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் 3 வருட கடுமையான சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து தற்போது மீண்டும் படங்களை இயக்கி வருகிறார்.
இதைப் போன்ற ஏராளமான பிரபலங்கள் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.