தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி! உதயநிதி போட்ட முக்கிய ஒப்பந்தம்!
புவனேஸ்வர்: தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்குவதற்கு வழி வகுக்கும் வகையில் ஒடிசாவில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், இந்த ஒப்பந்தமானது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும் , மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி! மாவட்ட நிர்வாகிகள் நியமனம் ஜரூர்! நேர்காணல் நடத்தும் தயாநிதி மாறன்
ஒடிசாவில் உதயநிதி
15-வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநில விளையாட்டு கட்டமைப்பு களை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இளம் திறமையாளர்கள்
இந்த ஒப்பந்தமானது, இளம் திறமையாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக்கொள்ள உதவும். இது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும் , மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும்.
உலக தரம் வாய்ந்த பயிற்சி
இதனால், உலக தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமிகள் , விளையாட்டு கல்வி கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும் , உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் களை உருவாக்கிடவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும்.
அதிகாரிகள்
இந்நிகழ்ச்சியில் ஒடிசா மாநில விளையாட்டுத்துறை செயலர் வினில் கிருஷ்ணன், ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் மதிவதனன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.