தங்கங்களே, நாளைய தலைவர்களே... கையை நல்லா கழுவுங்கப்பா... ஆரோக்கியமா வாழலாம்!
டெல்லி: சர்வதேச அளவில் உலக கை கழுவும் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
உலகின் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமின்மையால் தான் பரவுகின்றன என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதிலும் இத்தகைய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.
எனவே, வருங்கால சந்ததி ஆரோக்கியமானதாக திகழ குழந்தைகள் சோப் மூலம் கைகளைக் கழுவும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
சோப் போட்டு...
உணவு உண்பதற்கு முன்னதாகவும், கழிவறைக்குச் சென்று வந்த பின்பும் கைகளை சோப்பு கொண்டு கழுவுவது அவசியமாகும். இதன் மூலம் நோய் தொற்று தவிர்க்கப்பட்டு, ஆரோக்கியமாக வாழலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு...
சுகாதாரமின்மையால் பெரியவர்களை விட அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். இதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகள் உடல் அளவிலும், மன அளவிலும் வளர்ச்சியில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எதிர்கால சந்ததி ஆரோக்கியமின்மையால் அவதிப்படும் அபாயம் உள்ளது.
கை கழுவும் தினம்...
குழந்தைகளை நோய்ப்பாதிப்பில் இருந்து பாதுகாக்க எளிய வழி மேற்கூறியபடி சாப்பிடுவதற்கு முன்னரும், கழிவறைக்குச் சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு கழுவுவது தான். எனவே, ஆண்டுதோறும் அக்டோபர் 15ம் தேதி உலக கை கழுவும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தண்ணீரில் நனைப்பதல்ல...
கை கழுவுவது என்றால் வெறுமனே தண்ணீரில் கைகளை நனைப்பதல்ல என்கிறார் யூனிசெஃப் நிறுவனத்தின் கேரள மற்றும் தமிழ்நாடு தலைமை நிர்வாகி ஜாப் ஜக்கரியா. மேலும், அவ்வாறு செய்வதால் கைகளில் உள்ள நோய் கிருமிகள் அழியாது. சோப்பு போட்டு முறையாக கழுவதன் மூலமே கிருமிகளைக் கொல்ல முடியும் என்கிறார் அவர்.
பாதுகாப்பு...
கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50% டயரியா மற்றும் 25% நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இது தவிர டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்று பூச்சிகள், பன்றி காய்ச்சல், எபோலா, தோல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் அவர்களை நெருங்குவதில்லை.
நோய்த்தொற்று...
சுத்தமில்லாத கையில் ஒரு கோடி வைரஸ்களும், 10 லட்சம் பாக்டீரியாக்களும் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவை தண்ணீர், அடுத்தவர்களை தொடுவது மூலம் நோய்த்தொற்றாக மற்றவர்களுக்கும் பரவுகிறது.
சுறுசுறுப்பான குழந்தைகள்...
கைகளை சோப்புகள் போட்டு கழுவும் பழக்கம் மூலம் தொற்றுநோய் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும். கைகளை சுத்தமாக கழுவுவதால் ஆரோக்கியமாக வாழும் குழந்தைகள், பள்ளி வாழ்க்கையில் சுறுசுறுப்பாக விளங்குகின்றனர்.
விழிப்புணர்வு முகாம்...
எனவே, யூனிசெஃப் நிறுவனம் சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தை குழந்தைகளிடையே ஊக்குவிக்கும் விதமாக இன்று முதல் ஒரு மாத காலம் 57000 பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை...
ஆரோக்கியம் மட்டுமின்றி கை கழுவும் விஷயத்தில் நம்மவர்கள் கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளனர். கடந்தாண்டு கை கழுவும் தினத்தன்று, மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து, ஊரகப்பகுதிகள் என மாநிலத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த சுமார் 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 பேர் ஒரே நேரத்தில் கைகழுவி உலக சாதனை படைத்தனர்.
முந்தைய சாதனை...
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 14-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ஜென்டைனா, பெரு, மெக்சிகோ நாடுகளை சேர்ந்த 7 லட்சத்து 40 ஆயிரத்து 870 பேர் கலந்து கொண்டது சாதனையாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.