பத்திரிக்கை சுதந்திரம்: ஃபின்லாந்துக்கு முதலிடம்- அப்போ இந்தியாவுக்கு?
டெல்லி: சர்வதேச அளவில் பத்திரிக்கை சுதந்திரம் உள்ள நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதல் இடத்திலும், இந்தியா 133வது இடத்திலும் உள்ளன.
ரிப்போர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்(ஆர்.எஸ்.எப்) என்ற அமைப்பு 2016ம் ஆண்டுக்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 180 நாடுகளின் பெயர்கள் உள்ளன.
பத்திரிக்கை சுதந்திரம் உள்ள நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஃபின்லாந்தை அடுத்து நெதர்லாந்து இரண்டாவது இடத்திலும், நார்வே மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவோ 133வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 136வது இடத்தில் இருந்தது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், பிளாக்கர்கள் பல்வேறு மத அமைப்புகளால் தாக்கப்படுவதாக ஆர்.எஸ்.எப். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளாமல் உள்ளார். பத்திரிக்கையாளர்களை காக்க முயற்சி செய்யப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எப். பட்டியலில் பாகிஸ்தான் 147வது இடத்திலும், இலங்கை 141வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 120வது இடத்திலும், பூட்டான் 94வது இடத்திலும், நேபாளம் 105வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்கா 44வது இடத்திலும், ரஷ்யா 148வது இடத்திலும் உள்ளன.