இன்பத்துக்கு இடையூறு இல்லாத மெல்லிய ஆணுறைகள் அவசியம்-டெல்லியில் பில்கேட்ஸ் பேட்டி
டெல்லி: அணிந்திருப்பதே தெரியாத அளவுக்கான மெல்லிய ஆணுறை தயாரிக்கப்பட்டால்தான் பாதுகாப்பான உடலுறவுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்தார்.
உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் தனது மனைவி மலின்டாவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் சுகாதார நல உதவிகளை மேற்பார்வையிட அவர் வந்துள்ளார். டெல்லியில் அவர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் நிருபர்களிடம் பில்கேட்ஸ் கூறியதாவது:
தற்போதுள்ள ஆணுறை தங்களது இன்பத்துக்கு இடைஞ்சலாக உள்ளதாக ஆண்களும், பெண்களும் கருதுகிறார்கள். எனவே ஆணுறை பயன்பாடு குறைவாக உள்ளது. எனவே அணிந்திருப்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய பொருளால் ஆணுறை உருவாக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டில் இந்த முயற்சி சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். அதுதான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஆணுறையாக இருக்கப்போகிறது. இதுபோன்ற ஆணுறைகளை தயாரிக்க அதிகம் செலவுபிடிக்காமல் தயாரிப்பதுதான் சவாலான விஷயமாக உள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான அரசின் திட்டங்களால் நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். அதே நேரம் இந்தியாவில் இன்னும் அதிகமாக சுகாதாரத்துறையில் முதலீடு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். மோடி அரசின் குறிக்கோள்கள் நன்றாக உள்ளன. அதே நேரம் அதை செயல்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. கவர்ச்சியில்லாத திட்டங்களையும் மக்களின் நலனுக்காக செய்ய வேண்டியது சில நேரங்களில் அவசியமாகிறது.
இந்தியாவில், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால் அதை சரி செய்யவும் இங்கு வாய்ப்பு அதிகம். இந்தியாவில் உள்ள நல்ல சாலை வசதிகள் மக்களை சென்றடையும் பணியை \எளிதாக்குகின்றன. ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டைப்போல, மருத்துவமனைக்கு வரவே பயப்படக்கூடிய நிலை இந்தியாவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.