ஏர் இந்தியா தந்த சான்ட்விச்சில் 'டான்ஸ்' ஆடிய புழுக்கள்... கடுப்பான பயணி!
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட சான்ட்விச்சில், புழுக்கள் நெளிந்ததால் அந்த பயணி கடும் கோபமடைந்தார்.
நியூயார்க்- டெல்லி விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏஐ 102 என்ற அந்த விமானத்தில் ரஜோரியைச் சேர்ந்த ஒருவர் பயணித்துள்ளார். விமானத்தில் வழங்கப்பட்ட சான்ட்விச்சைப் பெற்ற அவர் அதை ஆசையுடன் சாப்பிட வாய்க்குக் கொண்டு சென்றபோது அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார்.
டெல்லி வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக ஏர் இந்தியா அதிகாரிகளை அணுகி இதுகுறித்து அவர் புகார் கொடுத்தார். அதன் பிறகு சென்று விட்டார். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா என்பதை ஏர் இந்தியா இந்தப் பயணிக்குத் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்குகையில், போதுமான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உணவை தயாரித்து சப்ளை செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் அரிதான சம்பவம். மிகுந்த ஆரோக்கியத்துடன்தான் அனைத்து உணவுகளும் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
அப்புறம் எப்படி மகாராஜா புழு வந்துச்சு....!?!