சரத் பவார் பிரதமரானால் மகிழ்ச்சி: சுஷில்குமார் ஷிண்டே அதிரடி!!
சோலாப்பூர்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமரானால் தாம் மகிழ்ச்சி அடைவேன் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத கட்சியின் தலைவரான சரத்பவாருக்கு கடந்த 1992ம் ஆண்டில் இருந்தே பிரதமர் பதவி மீது ஆசை உண்டு. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாட்டவர் என்ற விவகாரத்தில் கட்சியைவிட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார்.
தற்போது 2014 லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று பவார் அறிவித்துள்ளார். ஆனால் அவர் ராஜ்யசபா எம்.பியாக விரும்புவதாகவும் பிரதமர் பதவியை நோக்கி காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத் பவார் பிரதமரானால் தாம் மகிழ்ச்சி அடைவேன் என்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இப்போதும் அவர் உள்ளார் என்றும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜனவரி 17-ந் தேதியன்று அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் ஷிண்டேவின் கருத்து காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.