மங்களூரில் கே.எப்.சி. பர்கரில் நெளிந்த புழுக்கள்: மெத்தனமாக பதில் அளித்த மேனேஜர்
மங்களூர்: மங்களூரில் உள்ள கே.எப்.சி. உணவகத்திற்கு சென்ற பெண் ஒருவர் சாப்பிட்ட பர்கரில் புழுக்கள் நெளிந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருக்கும் சிட்டி சென்டர் மாலுக்கு பிரசாந்த் என்பவர் தனது வருங்கால மனைவி தீக்சிதாவுடன் சென்றுள்ளார். மாலில் இருக்கும் கே.எப்.சி. கிளைக்கு சென்ற அவர்கள் பர்கர் வாங்கி அங்கேயே சாப்பிட்டுள்ளனர்.
பர்கரை பாதி சாப்பிட்ட தீக்சிதாவுக்கு அதில் ஏதோ வித்தியாசமாக இருந்தது போன்று தெரிந்துள்ளது. அப்போது மீதமுள்ள பாதி பர்கரை பார்த்த அவர் அதிர்ச்சியில் மயங்காத குறை தான். காரணம் பர்கரில் இரண்டு புழுக்கள் நெளிந்துள்ளன.
உடனே இது குறித்து கடை மேனேஜரிடம் தெரிவித்ததற்கு அவரோ காய்கறிகளில் இருந்து வந்திருக்கும் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். மேலும் அவர்களை அந்த பர்கரில் இருந்த புழுக்களை புகைப்படம் எடுக்க அவர் அனுமதிக்கவில்லை.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி. காதர் கூறுகையில்,
தாங்கள் வழங்கும் உணவின் தரத்தை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த சம்பவம் குறித்து கே.எப்.சி.க்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். தரக்குறைவை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.
கே.எப்.சி. சிக்கனில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.