எப்டி இந்தியாவை முன்னேற்றலாம்... ஐடியா சொல்லுங்க... லண்டன் பறங்க!!
டெல்லி: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அறிவியலும், கண்டுபிடிப்புகளும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணியாக அமைகின்றன. இதனால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகிறது.
அந்தவகையில், இந்தியா தனது கண்டுபிடிப்பு முறைகளை எவ்வாறு மேம்படுத்தலாம், தேசிய மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் கண்டுபிடிப்புகள் தொடர்பான நிகழ்ச்சிகளின் பலன் எவ்வாறு உள்ளது என்பது குறித்த கேள்விகளுக்கான பதிலை மத்திய அரசு தேடுகிறது.
இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு கட்டுரைப் போட்டி ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது இந்தியாவில் உள்ள இங்கிலாந்து அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு தொலைத்தொடர்பு அமைப்பு.
3000 வார்த்தைகளில்...
இக்கட்டுரைகள் 3000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பயணம்...
சிறந்த கட்டுரைகளை எழுதும் 5 வெற்றியாளர்கள் இந்தாண்டு நவம்பர் மாதம் இலவசமாக இங்கிலாந்து அழைத்துச் செல்லப்படுவர். பயணத்திற்கான அனைத்து செலவுகளும் போட்டியை நடத்துபவர்கள் பொறுப்பு.
சின் இந்தியா பிளாக்...
மேலும், தேர்வாகும் இந்த 5 கட்டுரைகளும் சின் (SIN ) இந்தியா பிளாக்கில் பதிவேற்றம் செய்யப்படும்.
கட்டுரைச் சுருக்கம்....
முன்னதாக தங்களது கட்டுரைக்கான மையக் கருத்தை சுமார் 500 வார்த்தைகளில் சுருக்கமாக இம்மாதம் 18ம் தேதிக்குள்ளாக அப்ளிகேஷனோடு இணைத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 5ம் தேதி...
இதில் தேர்வாகும் கட்டுரைக் கருக்கள் மட்டுமே இறுதிப் போட்டியில் பங்கு பெற இயலும். இந்த முடிவுகள் செப்டம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படும்.
போட்டி முடிவுகள்...
இறுதிப் போட்டிக்கான கடைசித் தேதி செப்டம்பர் 22ம் தேதி என்றும், போட்டி முடிவுகள் அக்டோபர் 13ம் தேதி அறிவிக்கப் படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.