தவறான அடையாளத்தால் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் சிறையிலிருந்த பெண்... கேரள போலீஸ் மீது புகார்!
கொல்லம்: தவறான அடையாளத்தால் கைது செய்யப்பட்ட சாரா தாமஸ் என்ற பெண், கேரள குற்றப் பிரிவு போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.
கேரள மாநிலம் பந்தனம் திட்டாவைச் சேர்ந்தவர் சாரா தாமஸ். 37 வயதான இவர் துபாயில் வேலை பார்க்கிறார். சென்னையில் படிக்கும் தன் மகனைப் பார்க்க கடந்த நவம்பர் 29-ம் தேதி விமானத்தில் வந்தார். அப்போது சென்னை விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
13 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான சாரா வில்லியம்ஸ் என்ற பெண்ணுக்கு பதில் சாரா தாமஸின் படத்தை கொல்லம் குற்றப்பிரிவு போலீசார் அனுப்பியிருந்தனர். அதை வைத்து சாரா தாமஸை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
பின்னர் சாரா தாமஸ் கொல்லம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது சாரா தாமஸ் மகன் தலையிட்டு, நீங்கள் தேடும் பெண் இவர் அல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியுள்ளார் இவர் என்று கூறி கைது செய்துள்ளனர்.
அக்டோபர் 29ம் தேதி காலை 8 மணிக்கு கைது செய்யப்பட்ட சாரா தாமஸ், நவம்பர் 2-ம் தேதி வரை சிறையில் வைக்கப்பட்டார். இதற்கிடையில் அவரது மகன் கெவின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
புழல் சிறையில் குற்றவாளிகளுடன் இரண்டு நாள் வைக்கப்பட்டிருந்த சாரா தாமஸ் பின்னர், கொல்லம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இப்படி நான்கு நாட்கள் சிறையிலிருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம் சாரா தாமஸ். பின்னர்தான் தாம் தேடும் நபர் அவரில்லை என்று புரிந்து விடுதலை செய்துள்ளனர் கேரள போலீசார்.
"19 வயதான மகன் கெவினுக்கு தன் தாயை சட்ட ரீதியாக வெளியில் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. தாயைக் கைது செய்துவிட்டதை அவனால் வெளியில் சொல்லக் கூட முடியாமல் தவித்திருக்கிறான்," என்கிறார் சாரா தாமஸின் தங்கை மெர்லின்.
சாரா தாமஸ் - சாரா வில்லியம்ஸ் இருவரும் வேறு வேறு என்பதைப் புரிந்து கொள்ளக் கூட போலீஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம்.
சாரா தாமஸின் பாஸ்போர்ட்டைப் பார்த்து, அதில் அவர் பயணம் செய்த நாடுகள் விவரங்களைப் பார்த்திருந்தாலே போதும், இந்த கைது நடந்திருக்காது. காரணம், சாரா தாமஸ் துபாயிலிருந்து பல முறை சென்னைக்கு வந்து போயிருக்கிறார். ஒருமுறை கூட அவர் ஐரோப்பிய நாடுகள் எதற்கும் போனதில்லை. ஆனால் தேடப்படும் குற்றவாளியான சாரா வில்லியம்ஸ் லண்டனுக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறார்.
இந்த அடிப்படை உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ள முயலாமல், அவசர அவசரமாக போலீசார் கைது செய்து, ஒரு பெண்ணை அவமானப்படுத்தி, மன ரீதியாக பெரும் கொடுமையை அனுபவிக்க வைத்ததற்காக, கேரள மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர் சாரா தாமஸ் தரப்பில்.