யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தை ஊடகங்கள் ஒளிபரப்ப மகா. அரசு தடை- லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!!
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு மகாராஷ்டிரா போலீசார் தடை விதித்திருந்தனர். போலீசாரின் கெடுபிடிகளை நெருக்கடிகளை மீறி யாகூப் மேமனின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க அமைதியான முறையில் நடைபெற்றது.
1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு 2007 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தமக்கான தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அனைத்து வகையான சட்ட முயற்சிகள், கருணை மனுக்களை யாகூப் மேமன் முயற்சித்துப் பார்த்தார்..
கடைசி நிமிடம் வரை ஜனாதிபதி மாளிகையின் கதவுகளையும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டிப் பார்த்தார் யாகூப் மேமன்.. மும்பை தொடர் குண்டு வழக்கில் தாமே முன்வந்து சரணடைந்து சி.பி.ஐ. விசாரணைக்கு உதவிய யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்ற குரல்களும், தூக்கு தண்டனையை எதிர்த்த அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாகூப் மேமனுக்கு கருணை காட்ட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன..
எதுவுமே யாகூப் மேமனை காப்பாற்றவில்லை.. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் சிறையில் நேற்று காலை 6.35 மணிக்கு யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். பொதுவாக தூக்கு கைதிகளின் உடல்களை சிறைக்குள் அடக்கம் செய்வது வழக்கம் என்பதால் யாகூப் மேமன் உடலையும் அப்படியே சிறைக்குள் புதைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் மறுத்து வந்தது.
ஆனால் யாகூப் மேமன் உடலை அடக்கம் செய்யும் போது எந்த ஒரு பிரச்சனையும் வராது என்று அவரது குடும்பத்தினர் உறுதி கொடுத்து கேட்டுக் கொண்டதையடுத்து உடல் ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில் மேமனின் இறுதி ஊர்வலத்தை ஊடகங்கள் ஒளிபரப்பினால் அனுதாபம் கிடைத்துவிடும் என்பதற்காக இந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று மகாராஷ்டிரா துணை கமிஷனர் சஞ்சய் பார்குண்ட் உத்தரவிட்டிருந்தார். அதாவது நேற்று காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை மொத்தம் 13 மணிநேரம் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டிவி ஊடகங்கள் தாமாகவே முன்வந்து யாகூப் மேமனின் இறுதி சடங்கு மற்றும் ஊர்வலத்தை ஒளிபரப்பாமல் ஒதுங்கிக் கொண்டன. சில டிவி சேனல்கள், யாகூப் மேமன் ஒரு தேசத் துரோகி; அவரது ஊர்வலத்தை ஒளிபரப்பி ஹீரோவாக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே ப்ளாஷ் செய்திகளையும் போட்டன. இத்தனை நெருக்கடிகள், தடைகளை மீறி லட்சக்கணக்கானோர் யாகூப் மேமனின் இறுதி ஊர்வலத்தில் முழு அமைதியாக பங்கேற்றனர்.
மேலும் மேமனுக்காக எந்த பேரணியும் நடத்தக்கூடாது என்று போலீசார் அவரது வீடு அமைந்துள்ள மாகிம் பகுதியில் தொடர்ந்து அறிவிப்பு செய்தபடியும் இருந்தனர். மேமனின் உடல் புதைக்கப்படும் படா கபர்ஸ்தான் சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே யாகூப் மேமனின் உடல் சந்தன்வாடி மயானத்தில் உரிய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பூஷண் சாடல்
இதனிடையே உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யாகூப் மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்படாமல் அவரை தூக்கிலிடுவதில் இத்தனை அவசரம் காட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் அனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்தவர்; அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பது வஞ்சத்தை தீர்க்கும் வகையிலான வன்முறையை அரசே நிகழ்த்தியுள்ளது என்று சாடியுள்ளார். யாகூப் மேமனின் கடைசி மனுவை உச்சநீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்திய போது மேமனுக்காக களமிறங்கிய வழக்கறிஞர்களின் பூஷணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.