மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு! வன்முறைக்கு வாய்ப்பு.. ஐ.பி வார்னிங்
மும்பை: மும்பையில், 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள யாகூப் மேமனுக்கு வரும் 30ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், நாட்டில் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை (ஐ.பி) எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. நாட்டையே உலுக்கிய முதலாவது பெரிய தீவிரவாத தாக்குதல் இது. இத்தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 713 பேர் காயம் அடைந்தனர்.
மும்பையில் நடந்த இந்த தாக்குதலில்தான், 2ம் உலகப் போருக்குப் பின் முதல் முறையாக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வகை வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரர்கள் தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன், யாகூப் மேமன் சகோதரர்கள். குண்டு வெடிப்பு நடந்ததும் மூவரும் மும்பையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். இவர்களில் யாகூப் மேமன் காட்மாண்டு விமான நிலையத்தில் வைத்து நேபாள போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டான்.
மும்பை தடா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்த, யாகூப் மேமன் மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு நிதி உதவி உள்பட பல்வேறு உதவிகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிருபிக்கப்பட்டதால் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள்தண்டனை, 14 வருடம் சிறை, 10 வருடம் சிறை எனவும் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கு தண்டனையை மும்பை ஹாகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினான். கடந்த ஆண்டு கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.
அதன் பிறகு யாகூப் மேமன் சுப்ரீம் கோர்ட்டில் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தான். அந்த மனுவையும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
வருகிற 30ம் தேதி காலை 7 மணிக்குள் அவனை தூக்கில் போட மராட்டிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் யாகூப் மேமன் 2வது முறையாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். இந்த மனு வருகிற 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது. யாகூப் மேமனின் அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டதால் இந்த மனுவும் தள்ளுபடியாகும் வாய்ப்பு உள்ளது.
யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கு அவனை தூக்கில் போடுவதற்கான உத்தரவு கடந்த திங்கட்கிழமை ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. ஜெயில் ஊழியர்கள் யாகூப் மேமனை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், யாகூப் மேனனை தூக்கில் போட்டால், இந்திய முஸ்லிம்கள் அதிருப்தியடைவார்கள் என்று ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. டிவிட்டரில் நேற்று இது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதையெல்லாம் உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
யாகூப் மேனனை தூக்கில் போட்டால், சில பிரிவினர் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி கலவரம் மூட்டலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளும் திடீர் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுல்ளது. மகாராஷ்டிரா மற்றும் மும்பை போலீசார், உளவுத்துறையுடன் இணைந்து, யார், யார் கலவரத்தை தூண்ட வாய்ப்புள்ளது என்பதை அடைாயளம் கண்டுள்ளனர். அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.