தூக்குக்கு தடை கோரும் யாகூப் மேமனின் மனு- வரும் 27-ல் விசாரிக்கிறது சிறப்பு பெஞ்ச்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தமக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு மீது வரும் 27-ந் தேதி சிறப்பு பெஞ்ச் விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி 13 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றினர். இதில் 257 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 713 பேர் படுகாயப்படுத்தினார்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் ஜனாதிபதியிடம் யாகூப் மேமன் கருணை மனுவைத் தாக்கல் செய்தார். இக்கருணை மனுவும் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை வரும் 30-ந் தேதியன்று தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மற்றும் நிவாரண மனுக்களை யாகூப் மேமன் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் நிவாரண மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரிடம் மீண்டும் ஒரு கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் தமக்கு விதிக்கப்பட்ட துக்குக்கு தடை கோரி புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப் புதிய மனு மீது வரும் 27-ந் தேதியன்று சிறப்பு பெஞ்ச் விசாரணை நடத்தும் என்று இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து கூறியுள்ளார். அதே நேரத்தில் யாகூப் மேமனை தூக்கில்டும் பணிகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டு வருகிறது.