மும்பை தொடர் குண்டுவெடிப்பு: யாகூப் மேமனின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான யாகூப் மேமனின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தனது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான யாகூப் மேமனுக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பின்னர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் இது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, யாகூப் மேமன் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், அந்த கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் யாகூப்பின் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இவ்வழக்கின் மீதான விசாரணை முடிந்தது. அதனைத் தொடர்ந்து, யாகூப் மேமனின் மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
இதனால், விரைவில் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.