பூர்வோத்திரத்தை புரட்டினால் ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவுக்கு தாவியதில் துளிகூட ஆச்சரியமே இல்லை!
போபால்: ஜோதிராதித்யா சிந்தியாவை தொடர்ந்து மத்திய இந்தியாவை ஆண்ட குவாலியர் மகாராஜாக்களான சிந்தியா குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் அனைவருமே பாஜக ஜோதியில் இணைந்துள்ளனர். ஆகையால் இதை கார் வாப்சி போல (தாய் மதம் திரும்புதல் போல தாய் கட்சிக்கு திரும்புதல்) என குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தையும் பாஜக பிரமுகருமான யசோதரா சிந்தியா.
விஜயராஜ சிந்தியா... குவாலியர் அரசின் ராஜமதா - கடைசி மகாராணி என போற்றப்பட்டவர். இந்தியாவில் ஜனசங்கம் என்ற கட்சியையும் இன்றைய பாஜகவையும் உருவாக்கி அடித்தளம் போட்டுக் கொடுத்த மூத்த தலைவர்களில் ஒருவர்தான் விஜயராஜே சிந்தியா. எப்படி இந்திரா குடும்பத்துக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது என்பார்களோ அதேபோல் வசுந்தரராஜே சிந்தியாவின் குடும்பத்துக்கு பாஜக ரத்தம் என்பது மிகையும் இல்லை.
1957-ல் மத்திய பிரதேசத்தின் குணா லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர் விஜயராஜே சிந்தியா. 1962-ல் குவாலியர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு மீண்டும் வென்றார் விஜயராஜே சிந்தியா. ஆனால் காங்கிரஸில் இருந்து விஜயராஜே சிந்தியா 1967-ல் விலகி சுதந்திரா கட்சி வேட்பாளராக குணா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதன் பின்னர் பாரதிய ஜன சங்கத்தில் (பாஜகவின் தாய் அமைப்பு) தம்மை விஜயராஜே சிந்தியா இணைத்துக் கொண்டு லோக்சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 1967-ல் ஜனசங்கத்தின் வேட்பாளராக கரேரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்று மாநில அரசியலில் நுழைந்தார்.
குட்பை சொன்ன ராகுல் தளபதி ஜோதிராதித்யா சிந்தியா- இளைய தலைமுறை தலைவர்களை இழக்கும் காங்கிரஸ்!
குவாலியர் பிரதேசம்
1971-ல் நாடு முழுவதும் இந்திராவுக்கு ஆதரவான அலை வீசியது. ஆனாலும் குவிலியார் பிரதேசத்தில் 3 இடங்களில் ஜனசங்கம் வென்றது. பிந்த் தொகுதியில் விஜயராஜே சிந்தியா, குவாலியரில் வாஜ்பாய், குணாவில் மாதவராவ் சிந்தியா வெற்றி பெற்று எம்.பி.யானார்கள். பின்னர் மாதராவ் சிந்தியா காங்கிரஸுக்கு தாவினார். 1977 லோக்சபா தேர்தலில் விஜயராஜே சிந்தியா போட்டியிடவில்லை. 1980-ல் இந்திரா காந்தியை எதிர்த்து ரேபரேலியில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார் விஜயராஜே சிந்தியா. 1984 தேர்தலிலும் விஜயராஜே சிந்தியா போட்டியிடவில்லை. 1989-ல் குணா லோக்சபா தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக போட்டியிட்டு மீண்டும் லோக்சபா எம்.பியானார் விஜயராஜே சிந்தியா. 1991, 1996, 1998 தேர்தல்களிலும் போட்டியிட்டு குணா தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் விஜராஜே சிந்தியா.
எமர்ஜென்சியில் சிறைவாசம்
அவசரநிலை பிரகடனத்தின் போது ராஜமாதா என போற்றப்பட்டு மகாராணி விஜயராஜே சிந்தியாவையும் இந்திரா அரசு டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. 1980களில் பாஜக உதயமான போது கட்சியின் 2 துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்தார் விஜயராஜே. பாஜகவில் 1998-ம் ஆண்டு வரை துணைத் தலைவராக பதவி வகித்த பெருமை விஜயராஜே சிந்தியாவுக்கு உண்டு.
அயோத்தி ராமர் கோவில்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்கிற இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் விஜயராஜே சிந்தியாவும் ஒருவர். 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, என் கனவு நிறைவேறிவிட்டது. எந்த வித ஏக்கமும் இல்லாமல் இப்போதே மரணித்துவிட்டாலும் மகிழ்ச்சிதான் என முதுமையிலும் ஆராவாரம் செய்தவர் விஜராஜே சிந்தியா.
பாஜகவில் குவாலியர் குடும்பம்
2001-ம் ஆண்டு முதுமையால் விஜயராஜே சிந்தியா காலமானார். விஜயராஜே சிந்தியாவின் மகள்களில் வசுந்தரராஜே சிந்தியா, ராஜஸ்தானில் பாஜகவின் முதல்வராக 3 முறை பதவி வகித்தவர். வசுந்தரராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் பாஜக எம்.பி. மற்றொரு மகள் யசோதரா சிந்தியா, மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகானின் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்.
மாதவ்ராவ் சிந்தியா குடும்பம்
அரசியல் வாழ்க்கையை ஜனசங்கத்தில் தொடங்கிய மாதவ்ராவ் சிந்தியா பின்னாளில் காங்கிரஸில் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். 2001-ல் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸில் இளம் தலைவரானார். காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி வகித்த போது அவரது தளகர்த்தர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. ஆனால் மூத்த தலைவர்களான கமல்நாத், திக்விஜய்சிங்குடன் மல்லுக்கட்ட முடியாமல் இப்போது குடும்ப கட்சியான பாஜகவுக்கே திரும்பிவிட்டார் ஜோதிராதித்யா சிந்தியா.
கார் வாப்சி என்கிறார் யசோதரா
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தையான யசோதரா ராஜே சிந்தியா, அவரது முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். இதுதான் கார் வாப்சி என்பது.. தாய்மதம் திரும்புதல் போல தாய் கட்சிக்கு திரும்புவது.. மாதவ்ராவ் சிந்தியா ஜனசங்கத்தில்தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். ஜோதிராதித்யாவை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆம் தாய் கட்சிக்கு தாவினார் ஜோதிராதித்யா சிந்தியா!