என்எஸ்ஜி விவகாரத்தில் மத்திய அரசு தவறாக வழிநடத்தப்படுகிறது- பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடல்
டெல்லி: அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி. விவகாரத்தில் மத்திய அரசு தவறாக வழிநடத்தப்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக சாடியுள்ளார்.
என்.எஸ்.ஜி குழுவில் உறுப்பினராக சேர இந்தியா தீவிரமாக முயற்சித்தது. ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததை சுட்டிக்காட்டி சீனா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் இந்தியாவுக்கு சிறப்பு விலக்கு அளித்தால் பாகிஸ்தானையும் என்.எஸ்.ஜி.யில் சேர்க்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியது. இதனால் தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் என்எஸ்ஜியில் இந்தியா இடம்பெறும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை பதவியில் உள்ள சிலர் தவறாக வழிநடத்துவதாக பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சின்ஹா, என்.எஸ்.ஜி.,யில் நாம் இடம்பெற்றால் தோற்றவராகி விடுவோம். நமக்கு இழப்பு தான் ஏற்படும். லாபம் கிடையாது. என்எஸ்ஜியில் இந்தியா இணையக்கூடாது என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கின்றேன். அங்கு விண்ணப்பிக்க தேவையில்லை. நமது அரசின் பாகிஸ்தான் தொடர்பான கொள்கைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது எனவும் விமர்சித்துள்ளார்.
பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மத்திய அமைச்சர்களை விமர்சித்து வரும் நிலையில் மூத்த தலைவரான யஷ்வந்த்சின்ஹாவும் மத்திய அரசை சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.