காஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் சென்ற பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமக்கள் குழு என்ற தன்னார்வ தொண்டு குழுவை சேர்ந்தவர்களுடன் யஷ்வந்த் சின்ஹா காஷ்மீருக்கு சென்றிருந்தார். இவரை தவிர, இந்த குழுவில் கபில் கக், பாரத் புஷன் மற்றும் சுஷோபா பர்னாட் ஆகியோரும் இருந்தநர்.
இன்று காலை 11:30 மணிக்கு விமானம், தரையிறங்கியதும், அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்டதும், யஷ்வந்த் சின்ஹாவிடம் டெல்லிக்கு திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தபபட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். விமான நிலையத்திலிருந்து வேறு எங்கும் போக முடியாது என அவர் உறுதியாக கூறிவிட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பாஜக சீனியர் தலைவரான யஷ்வந்த் சின்ஹா தற்போதைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தவர். பொருளாதார கொள்கைகளை கடுமையாக சாடியவர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, 370 வது பிரிவை ரத்து செய்ததற்காக மத்திய அரசின் நடவடிக்கையை யஷ்வந்த் சின்ஹா கண்டித்துள்ளார். மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மக்களை பிற இந்தியர்களிடமிருந்து மேலும் அந்நியப்படுத்தும் என்று கூறியிருந்தார்.